காவிரிக்காக ஜெ. வை கர்நாடகா பழிதீர்ப்பதாக சொல்வதா? "நான்சென்ஸ்" என்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: காவிரி பிரச்சனைக்காக ஜெயலலிதாவை கர்நாடகா பழிதீர்ப்பதாக முட்டாள்தனமான தகவல்களை வதந்திகளை அதிமுகவினர் பரப்புகின்றனர் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சாடியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
{ventuno}
ஜெயலலிதா மீது 18 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. அது தமிழ்நாட்டு நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் இத்தனை ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் பெங்களூர் நீதிமன்றத்திலும் இழுத்தடிக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.
இத்தனை ஆண்டுகால இழுத்தடிப்புக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் காரணமே தவிர வேறு யாரும் காரணம் அல்ல. ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று போதுமான ஆதாரங்களுடன் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா 3 ஆயிரம் ஏக்க நிலம், பல கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் என வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்தது உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி இருக்கையில் காவிரி பிரச்சனைக்காகத்தான் ஜெயலலிதாவை கர்நாடகா நீதிமன்றமும் நீதிபதியும் தண்டிப்பதாக அதிமுகவினர் முட்டாள்தனமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.