சென்னை மெரினா கடற்கரையில் ஈழத் தமிழர் படுகொலையின் 7-ம் ஆண்டு நினைவஞ்சலி
சென்னை: இலங்கையின் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஈழத் தமிழருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஓவியர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி பலியான ஈழத்தமிழர்களுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூணில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தின் முடிவில் வைகோ செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, யார் தடுத்தாலும் இலங்கையில் சுதந்திரமான தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.