சொந்தக் காசில் சூனியமா... "லைவ்" கட்... விஜயகாந்த் பேச்சை எடிட் செய்து ஒளிபரப்பும் "கேப்டன்"
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபகாலமாக பிரச்சாரங்களில் சொதப்புவதால், அவரது பேச்சை நேரடியாக ஒளிபரப்புவதை அக்கட்சியின் தொலைக்காட்சி சேனலே தவிர்த்து வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால், வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வெவ்வேறு ஊர்களில் பிரபலத் தலைவர்கள் பேசுவது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
அந்தவகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிரச்சாரம் முன்பு கேப்டன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
அதிருப்தி...
ஆனால், காரசாரமாக பிரச்சாரத்தை துவக்கும் விஜயகாந்த், இடையில் பிரியாணி செய்வது எப்படி, தான் நாய் வளர்க்கும் கலை போன்றவை குறித்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவது தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
ஆவேசம்...
அதுமட்டுமின்றி, கூட்டத்தில் மக்கள் கூச்சலிட்டால் ஆவேசமாகும் விஜயகாந்த், அடுத்து அதிரடியாக ஏதாவது செய்து விடுகிறார். பிரச்சாரங்களை நேரடியாக ஒளிபரப்பும் போது, இது அனைவரும் பார்க்கும்படி ஆகி விடுகிறது.
மீம்ஸ்...
இது மட்டுமின்றி, அக்கட்சியில் வரும் வீடியோக்களை வைத்தே பலர் மீம்ஸ்கள் தயாரித்து, அதனை இணையத்தில் உலவ விட்டுள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் உள்ள வேளையில் இது போன்ற விரும்பத்தகாத விளம்பரங்கள் கட்சியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பது கட்சி நிர்வாகிகளின் எண்ணம்.
பாதிப்பு...
இதனால், வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் உள்ளது. இதனால், சொந்தக் காசில் நாமே சூனியம் வைத்துக் கொள்ளவேண்டாம் என கட்சி மேலிடத்தில் இது தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது.
லைவ் கட்...
அதன் தொடர்ச்சியாக விஜயகாந்த் பிரச்சாரத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதை அந்த சேனல் குறைத்துள்ளது. அதற்குப் பதில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் பிரச்சாரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விஜயகாந்த் பிரச்சாரம் எடிட் செய்து ஒளிபரப்பப் படுகிறது.