29 வயதில் மாரடைப்பால் பாடகி மரணம்: மக்களே, இதயம் பத்திரம்
சென்னை: மாறி வரும் வாழ்க்கை முறையால் இளம் தலைமுறையினர் கூட மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி படங்களில் பாடல் பாடி வந்தவர் ஷான் ஜான்சன்(29). மணக்கோலத்தில் இருக்க வேண்டியவர் திடீர் என்று மரணம் அடைந்துவிட்டார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
வெறும் 29 வயதே ஆன ஷான் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்தியா
இந்தியாவில் பலரின் உயிரை குடித்து வருவது மாரடைப்பு. மாரடைப்பு என்றால் வயதானவர்களுக்கு தான் வரும் என்ற காலம் மலையேறிவிட்டது.
இளைஞர்கள்
தற்போது 20களில் இருப்பவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறது. காரணம் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் உணவு பழக்க வழக்கமும், சுகாதாரமற்ற வாழ்க்கை முறையும் தான்.
துரித உணவு
துரித உணவு வகைகளை சாப்பிடாதீர்கள். சாப்பிட்ட உடன் குளிர்பானங்களை குடிக்காதீர்கள். உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து இருக்காதீர்கள் என்று மருத்துவர்கள் மைக் வைக்காத குறையாக கூறுவது யார் காதிலும் விழுவது இல்லை.
உடற் பயிற்சி
உடற் பயிற்சி செய்யுங்கள், தினமும் 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்யுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். மருத்துவர்களுக்கு என்ன வேலை, எதையாவது கூறுவார்கள், உடற்பயிற்சி யாருக்கு நேரம் இருக்கிறது என்கின்றனர் பலர்.
யோகா
ஊர், உலகத்திற்கு எல்லாம் யோகா கற்றுக் கொடுத்த நாடு நம் இந்தியா. ஆனால் இந்தியாவில் எத்தனை பேர் யோகா செய்கிறார்கள்? யோகா செய்தால் நலமாக வாழலாம் என்று நிச்சயமாக தெரிந்துமே பெரும்பாலானோர் அதை கண்டுகொள்வது இல்லை.
இது தான் சமயம்
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். அதனால் இருக்கும் வரை நோய் இல்லாமல் வாழத் தேவையான நடவடிக்கைகளை இன்றே எடுப்போம், நலமாக வாழ்வோம்.