திரை இசை, கர்நாடக இசைகளில் தேசிய விருது பெற்ற ஞானி பாலமுரளி கிருஷ்ணா.. சிவசிதம்பரம் புகழஞ்சலி
திரை இசை மற்றும் கர்நாடக இசைகளில் தேசிய விருதுகளை பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா என்று பாடகர் சிவசிதம்பரம் புகழஞ்சலி சூட்டியுள்ளார்.
சென்னை: கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா திரை மற்றும் கர்நாடக இசை என இரண்டு துறைகளிலும் தேசிய விருதுகளைப் பெற்ற மகா ஞானி என்று கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி கோ. சிவசிதம்பரம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கர்நாடக இசைக் கலைஞர் பால முரளி கிருஷ்ணா இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 86 வயதான அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அவரின் உயிர் பிரிந்தது.
கர்நாடக இசை மற்றும் திரை இசை உலகில் அவரது இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு குறித்து சீர்காழி சிதம்பரத்தின் மகனும், சிறந்த கர்நாடக இசைப்பாடகருமான சீர்காழி கோ. சிவசிதம்பரம் கூறியதாவது:
இசைத் துறையில் தனக்கென்று முத்திரையை பதித்த ஒருவர். ஒவ்வொரு இளம் இசைவாணரையும் உற்சாகப்படுத்தக் கூடியவர். அவரது பாட்டைக் கேட்டாலே இசையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். திரை இசையை குறைத்து மதிப்பிடாதவர். கர்நாடக இசையையும், திரை இசையையும் ஒன்றாக மதித்தவர். எனவேதான், அந்த இரண்டு துறைகளிலும் தேசிய விருது பெற்றார். அவ்வாறு இரண்டு துறைகளிலும் விருதுகளைப் பெற்ற ஒரே கலைஞன் இவர் மட்டும்தான். எண்ணற்ற புதிய ராகங்களை சுதந்திரமாகப் பாடி பலப்பல புதிய பரிமாணதை திரையுலகத்திற்கு கொண்டு வந்தவர்.
எனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனுடைய நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து திருவையாறு ஆராதனை பணியில் ஈடுபட்டவர்கள். மாபெரும் இசை மேதையான அவர் இசை உணர்வுகளை மிக எளிமையாக எடுத்துச் சென்றவர். எல்லோரும் பாட வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கியவர். அவர் ஒரு சங்கீத மகா ஞானி. அவரது இழப்பு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று சீர்காழி சிவசிதம்பரம் கூறினார்.