சர்ச்சை பேச்சு.. கிறிஸ்துதாஸ் மீது மத துவேச வழக்கு: நெல்லை நீதிமன்றம் உத்தரவு
நெல்லை: தொலைக்காட்சி விவாதத்தில் ராமர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, தொலைக்காட்சி தொகுப்பாளினி, தொலைக்காட்சி நிறுவனம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இந்துமுன்னணி தலைவர் தங்கமனோகர், வள்ளியூர், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கடந்த 18 ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி கலந்துகொண்டார். அதில், ராமர்பிரானை செருப்பால் அடிப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்துக்களின் மனம் புண்படும் படி பேசிய அவர் மீதும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, நிகழ்ச்சி நடத்திய தனியார் செய்தி தொலைக்காட்சி ஆகியோர் மீது மத துவேச பேச்சுக்காக 153 ஏ 1 என்ற இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இதுகுறித்து பழவூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.