இந்திய வரைபடத்திலிருந்தே காவிரி படுகை காணாமல் போகக்கூடும்: பேராசிரியர் ஜெயராமன் திடுக்!
இந்திய வரைபடத்திலிருந்தே காவிரி படுகை காணாமல் போகக்கூடும் என பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: இந்திய வரைபடத்திலிருந்தே காவிரி படுகை காணாமல் போகக்கூடும் என பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் கிணறுகள் அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த மே மாதம் முதல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டது. குழாய்களை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட கசிவால் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு குடிப்பதற்கே முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் கண்டித்து கிராம மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 10 பேர்
இதைத்தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன. அவர்களை விடுவிக்கக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
10 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில் அண்மையில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
அரசு கனிவோடு பார்க்க வேண்டும்
ஜாமினில் விடுதலையான பேராசிரியர் ஜெயராமன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சமூக அக்கறையோடு போராடுவோரைத் தமிழக அரசு கனிவோடு பார்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விடும்
வருங்கால சந்தத்தியினரைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்தார். காவிரி படுகை இந்திய வரைபடத்திலிருந்தே காணாமல் போகக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என்றும் ஜெயராமன் கூறியுள்ளார்.
மத்திய அரசு சொல்வதையெல்லாம்..
மத்திய அரசு சொல்வதையெல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களையும் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.