காவிரி விவகாரம் : அக்.25ல் அனைத்துக்கட்சிக் கூட்டம் - மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 25ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்பது தமிழக விவசாயிகளின் கோரிக்கையாகும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கிவிட்டது. இதனைக் கண்டித்து விவசாயிகள் மற்றும் எதிர்கட்சியினர் 48 மணிநேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஆளும் கட்சி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தா விட்டால் வலுவான எதிர்கட்சியாக உள்ள திமுக அனைத்துகட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் என ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து மனு ஒன்றையும் அளித்தார்.
இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அழைப்பு கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கட்டத்திற்கு பா.ஜ.,விற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினால் அதில் பாஜக பங்கேற்காது எனவும், தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மட்டுமே பாஜக பங்கேற்கும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த வாரம் கூறி இருந்தார். இதனால் அக்டோபர் 25ம் தேதி திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும் என கூறப்படுகிறது.
இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் அவர், ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.