காவிரி விவகாரம்: தமிழகத்தில் நாளை பந்த்.. பஸ்கள் இயக்கத்தை ரத்து செய்தது கர்நாடகா
சென்னை: காவிரியிலிருந்து நீர் தர மறுக்கும், கர்நாடகாவைக் கண்டித்து, நாளை, தமிழகம் முழுவதும் நாளை பந்த் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பந்த்தையொட்டி, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அந்த மாநில பஸ்கள் நாளை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், நீரை முறைப்படி மத்திய அரசு பெற்றுத் தர வலியுறுத்தியும், நாளை, மாநிலம் முழுவதும் பந்த் நடத்துகிறது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு.
இதற்கு, விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்புகள் என, பல தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன. பந்தின் போது, ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்பட உள்ளன. சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், விவசாயிகள் மறியல் செய்ய உள்ளனர். ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.
பல்லாவரம் ரயில் மறியல் போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சியினரும், கோயம்பேட்டில் நடக்கும் சாலை மறியல் போராட்டத்தில், தேமுதிகவும் பங்கேற்க உள்ளன.
டெல்லி நாடாளுமன்றம் முன், தமிழக எம்.பிக்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக எம்.பிக்கள் பங்கேற்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்று விரும்பும், விவசாய சங்கங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் பந்த்தின்போது, கர்நாடக அரசு பஸ்கள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கருதும் அம்மாநில போக்குவரத்து துறை, பெங்களூர் உள்ளிட்ட அம்மாநில நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கும் பஸ்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. நாளை சுமார் 600 பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.