ரயில் மறியல் : சென்னையில் வைகோ, திருமா, சீமான் கைது #Cauvery
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.
வைகோ, திருமாவளவன்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் தண்டவாளம் வரை ஊர்வலமாக சென்ற போது அரசியல் தலைவர்களுடன் ஏராளமான தொண்டர்களும் வந்ததால் பொதுமக்களின் நலன் கருதி போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்ற போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தண்டவாளத்தில் முழக்கம்
போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினரை மட்டும் ரயில் மறியலில் ஈடுபட காவல்துறையினர் அனுமதி தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பிய வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரிடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர போரட்டத்திற்கு பின்னர் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சீமான் மறியல் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபடும் முன் நாம் தமிழர் கட்சியினர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் தண்டாவளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கைது
தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இரண்டாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். விவசாயிகளின் மறியல் போராட்டம் காரணமாக இன்று பகலில் இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன.