காவிரி: முதல் முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. எம்.பி.க்கள் இணைந்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!
டெல்லி: தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயமாக காவிரி நதிநீர் பிரச்சனைக்காக "எதிரி கட்சிகளான" அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இந்த தீர்மானத்தை பிரதமரிடம் கொடுத்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வின் லோக்சபா (37) மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் (11) , தி.மு.க.வின் கனிமொழி, திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, இடதுசாரி கட்சிகளின் டி.ராஜா, ரங்கராஜன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்தனர்.
அப்போது காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசி மணலில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இது தொடர்பாக நிறைவேற்ற தீர்மான விவரத்தையும் பிரதமர் மோடியிடம் தமிழக எம்.பி.க்கள் வழங்கினர்.