ஆடி பெருக்கு விழா: திருச்சியை தொட்டது காவிரி நீர்- பொதுமக்கள் உற்சாகம்
சென்னை: ஆடிப்பெருக்குக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை மாலை திருச்சி வந்தடைந்தது. காவிரி நீர் கல்லணைக்கு வந்தடைந்தால் திருச்சி, தஞ்சை மாவட்ட மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விவசாயம் செழிக்க ஆடி மாதத்தில் பொங்கி வரும் காவிரி அன்னைக்கு மலர்தூவி வணங்கி வழிபடுவது காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வழக்கம். காவிரி பாயும் பகுதிகளில் ஆடி மாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம்தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 24ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
காவிரி நீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த்தேவைக்காக விடுவிக்கப்பட்டு வரும் 2000 கன அடி நீருடன், ஜூலை 25ம் தேதி முதல் வினாடிக்கு கூடுதலாக 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
பொங்கி வந்த காவிரி
இந்த தண்ணீர் கரூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை வினாடிக்கு 4100 கனஅடி வீதம் முக்கொம்பு மேலணைக்கு பகுதிக்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து முக்கொம்பு மேலணையிலிருந்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் மதகுகள் வழியாக வினாடிக்கு 4100 கனஅடிதண்ணீரைத் திறந்துவிட்டனர்.
திருச்சியை தொட்டது
வியாழக்கிழமை பிற்பகல் கம்பரசம்பேட்டை தடுப்பணை வந்த தண்ணீர்,மாலையில் காவிரியாற்றுப் பாலம் வழியாக திருச்சி மாநகரைக் கடந்து சென்றது. இந்த தண்ணீர் இன்று கல்லணையைச் சென்றைடைந்தது.
கல்லணையிலிருந்து திறப்பு
முக்கொம்பிலிருந்து 4100 அடி வீதம் திறக்கப்பட்டதண்ணீர், கல்லணைக்குச் சென்றடையும போது வினாடிக்கு 3800 கனஅடியாகத்தான் இருக்கும்.
ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடுவர்கள் என்பதால் கல்லணையிலிருந்தும் திறக்க பொதுப்பணித் துறை திறக்க முடிவுசெய்துள்ளது.
தஞ்சை மாவட்டத்திற்கும் தண்ணீர்
காவிரியாறு, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் மற்ற பகுதிகளுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது. கடந்தாண்டு ஆடிப்பெருக்குக்காக தண்ணீர் திறக்கப்பட்டாலும் திருவையாறு பகுதிக்கு முழுமையாகதண்ணீர் சென்றடையவில்லை.
உற்சாகக் கொண்டாட்டம்
திருவையாறு பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கடந்த ஆண்டு உற்சாகமாகக் கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இந்த பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர்திறக்கப்பட்டிருப்பதால் காவிரியாற்றில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயரக்கூடும். இதனால்,குடிநீர்ப் பற்றாக்குறை சற்றுக் குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.