உள்ளாட்சித் தேர்தல்.. உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு.. தங்கள் கருத்தை கேட்க வலியுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் கேவியட் மனு இன்று சுப்பரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட கோரி திமுக வழக்கு தொடுத்தது.
இதைத் தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைக்க பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சிப் பணிகளை கவனித்துக் கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மே 15-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நூட்டி மோகனராவ், சுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு முன்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.
தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதுள்ளது. அதனால், தேர்தல் வருகிற மே 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். குறிப்பிட்ட ஒரு தேதியை சொல்ல வேண்டும் என்று நீதிபதிகள் வழியுறுத்திய நீதிபதிகள், மே 14-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து உத்தரவிட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரதான வழக்கு விசாரணையை வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்தார்.