ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ கைக்கு போய் விடாமல் தடுக்கத் துடிக்கும் சிபிசிஐடி போலீஸ்!
திருச்சி: முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ கைக்குப் போய் விடாமல் தடுக்க சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக உள்ளனர். மிகப் பெரிய இழுபறியாக உள்ள இந்த வழக்கில் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என்று கூறி வந்த போலீஸார், தற்போது புது சாட்சியம் ஒன்று கிடைத்துள்ளதாக கூறி வருகிறார்களாம்.
கடந்த 33 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார் ராமஜெயம். அதன் பின்னர் உள்ளூர் போலீஸார் விசாரணையில் இறங்கினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டும் புண்ணியம் இல்லை. குற்றவாளி யார் என்பதே தெரியவில்லை.
கிணற்றில் போட்ட கல்லாக கொலை வழக்கு இருந்து வந்த நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு செய்தார். அதில், இந்த வழக்கில் போலீஸார் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர். ஆகையால், ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவுக்கு வருகின்ற 5-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் கூடிய பதிலை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதனால் போலீஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இந்த வழக்கைத் தொடர்ந்து புதிய விசாரணைக் குழு ஒன்றை சிபிசிஐடி எஸ்.பி. அன்பு நியமித்தார். இந்தக் குழு டு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறதாம்.
கொலை செய்யப்பட்டதற்கு முதல்நாள் இரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமஜெயம் வந்துள்ளார். ராமஜெயத்துக்கு நெருக்கமான திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் உடன்வந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்தப் பேராசிரியர் அ.தி.மு.கவின் முக்கியப் பொறுப்பாளர் மற்றும் மன்னார்குடி பிரமுகர் ஒருவருக்கு மிகுந்த நெருக்கமானவர். இவர் தனக்கு மிக நெருங்கிய காவல் துறை உயர் அதிகாரியின் நட்பால் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிவிட்டார் என்று கூறுகிறார்கள்.
அந்தப் பேராசிரியரை தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ். ரயிலில் இரவு நீண்ட நேரம் அந்தப் பேராசிரியருடன் ராமஜெயம் பேசியபடி வந்திருக்கிறார். அதுபற்றிய விசாரணை தற்போது விரிவடைய ஆரம்பித்துள்ளது. ராமஜெயம் வழக்கமாக வாக்கிங் போகும்போது அவருடன் இன்ஸ்பெக்டர் செல்வராஜும், கவுன்சிலர் கண்ணனும் செல்வது வழக்கம். ஆனால், அன்று அவர்கள் இருவரும் செல்லவில்லை.
ராமஜெயம் கொல்லப்படுவதற்கு முன்பு, விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவரைக் கடத்தியிருக்கலாம் என்று கதை கட்டிய போலீஸார், ராமஜெயம் முதல்நாள் இரவே கொல்லப்பட்டு விட்டதாகவும் சொன்னார்கள். அது முழுக்க முழுக்கப் பொய் என்று தெரிய வந்துள்ளது. வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தவே இல்லையாம் ராமஜெயம். மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முதல் நாள் இரவு வீட்டில் சாப்பிட்டுள்ளார் ராமஜெயம். இதை வேலைக்காரப் பெண்ணின் சாட்சியம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அன்று இரவு ராமஜெயம் பாத்ரூம் போனதாகவும் அவரது உறவினர்கள் சொல்லி இருக்கிறார்கள். அடுத்து காலையில் அவரது வீட்டு முற்றத்தில் நீதிபதி ஒருவர் ராமஜெயத்திடம் பேசியதாகவும் அப்போது ராமஜெயம் நீதிபதியிடம், 7 மணிக்கு ஆபீஸுக்கு வாங்க பேசிக்கலாம் எனச் சொல்லிவிட்டு சென்றதாகவும் வாக்குமூலம் பதிவாகியுள்ளது.
மொத்த்தில் ராமஜெயம் கொலை மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதை குழப்பும் வகையில் போலீஸ் விசாரணை உள்ளது. யாரோ ஒரு போலி குற்றவாளியை போலீஸார் கோர்ட் முன்பு நிறுத்தலாம் என்று ராமஜெயம் தரப்பு சந்தேகப்படுகிறது.
அதை விட முக்கியமாக தற்போது போலீஸ் தரப்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ராமஜெயம் கொலையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம். அந்த நபர் காஞ்சிபுரம் சங்கர்ராமன் கொலை வழக்கு குற்றவாளியான ஒரு முக்கியப் பிரமுகருக்கு நெருக்கமானவர். அந்தப் பிரமுகருக்கும் ராமஜெயத்துக்கும் நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது. அதன் அடிப்படையில் ராமஜெயத்தை வரவழைத்து அந்தப் பிரமுகர் கொலை செய்துவிட்டாரா என்று சந்தேகிக்கிறதாம் போலீஸ். இப்போது விசாரணையில், புது துப்பு கிடைத்துள்ளது. அதை நீதிமன்றத்தில் சொல்லி விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டாம் என்போம் என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்களாம்.
மொத்தத்தில் இந்த வழக்கு சிபிஐக்கு போய் விடாமல் தடுக்க புது சுறுசுறுபப்புடன் களத்தில் இறங்கியுள்ளது சிபிசிஐடி. இதில் போலீஸ் வெல்கிறதா, ராமஜெயம் தரப்பு வெல்கிறதா என்பதை விட உண்மை வெல்லுமா என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.