இறுதி கட்டத்தை எட்டி வரும் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வழக்கு... நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நெல்லை : நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேளாண் துறையில் காலியாக உள்ள டிரைவர் பணி இடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடந்து வந்ததாகவும், அதற்கு உடன்படாமல் செயல்பட்டதால் அதிகாரி முத்துக்குமாரசாமி மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அப்போது வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி. கிருஷ்ணமூர்த்தி வேளாண்துறையின் தலைமை பொறியாளர் குமார் ஆகியோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
நெல்லை ரயில்வே போலீசாரிடமிருந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின்னர் இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியானது. முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் குமார் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட 2 பேரும் தற்போது வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக 306 ஐ.பி.சி. (தற்கொலைக்கு தூண்டுதல்), ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விரைந்து முடிப்பதில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். தற்கொலை செய்த அதிகாரி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், வேளாண்மைத்துறை ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வழக்கு விசாரணைக்கு தேவையான விவரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்துள்ளனர்.
சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருக்கும் பலரிடமும் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார், நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு இறுதிகட்டத்தை நோக்கி பயணப்பட்டு வருகிறது.