எஸ்.பி. பட்டினம் போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதியை சுட்ட எஸ்.ஐ. : கொலை வழக்கில் கைதாகிறார்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இளைஞர் இறந்த வழக்கில் எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அவர் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.பி.பட்டினம் காவல் நிலை யத்தில் 14.10.2014 அன்று விசா ரணைக்காக அழைத்துவரப்பட்ட சையது முகம்மது என்ற இளைஞர் எஸ்.ஐ. காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் வேலுச்சாமி விசாரணை நடத்தி னார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, மதுரை சிபிசிஐடியின் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது தன்னை கத்தியால் குத்த சையது முகம்மது முயன்றதால், தற்காப்புக்காக சுட்டதாக எஸ்.ஐ. காளிதாஸ் தெரிவித்தார். ஆனால் எஸ்.ஐ. திட்ட மிட்டே சுட்டுக்கொன்றதாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் எஸ்.ஐ.யின் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுதான் சையது முகம்மதுவை கொன்றது என்ற தடய அறிவியல் ஆய்வக ஆய்வறிக்கையானது விசாரணை குழுவினருக்கு கிடைத் தது. சிபிசிஐடி அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர்.
சம்பவத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரணை நடத்தியதில் சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுடும் அளவுக்கு, சையதுமுகம்மதுவால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை.
ஓர் உயிரிழப்புக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சிபிசிஐடி தலைமையகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
எஸ்.ஐ. மீது குற்றச்சாட்டு பதிய டி.ஐ.ஜி.யிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான கடிதம் ராமநாதபுரம் டி.ஐ.ஜி.க்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இந்த அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் தங்கியுள்ள எஸ்.ஐ. காளிதாஸ் கைதாகும் நிலை உருவாகும் என்று கூறியுள்ளனர்.