சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டியிடம் மேலும் 2 நாள் சிபிஐ விசாரணை !
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரிடம் மேலும் இரண்டு நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் பிரேம்குமார் உள்ளிட்ட மூவரையும் மேலும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 136 கோடி பணமும், 179 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார் மற்றும் அவர்களது கூட்டாளிகளான திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற காவல் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி வெங்கிடசாமி சேகர் ரெட்டி, சினிவாசலு, பிரேம் குமார் ஆகியோரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்து, கூடுதலாக 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடசாமி, சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரை கூடுதலாக இரண்டு நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
அதேசமயம், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.