டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம்- சிபிஐ மீண்டும் விசாரணை- மர்மம் விலகுமா?
திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளது. நாமக்கல்லில் வரும் 13ம் தேதி வரை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பாக நாமக்கல்லில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று திருச்செங்கோடு காவல்துறையினர் குடியிருப்பில் தனது அறையில் தூக்கில் தொங்கியபடி விஷ்ணுபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டிஎஸ்பியாக இருந்த மகேஸ்வரி பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.
பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கடலூரில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து டிசம்பர் மாதம் சிபிஐ எஸ்பி ராஜபாலா, டிஎஸ்பி ரவி ஆகியோர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் ஆலோசனை நடத்தினர்.
விஷ்ணுபிரியா மரண வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ராசிபுரம் டிஎஸ்பி ராஜி, விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட போது அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த காவல்துறையினருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
விஷ்ணுபிரியா மரணமடைந்த போது நாமக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமாரிடமும் விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது மீண்டும் விசாரணையை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் வரும் 13ம் தேதி வரை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.