ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா?.. கேட்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆராயாமலேயே அந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கண்களில் கருப்புத் துணிக் கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தத் திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மாணவர்கள், தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டை போன்ற மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
மக்கள் நலத்திட்டங்களை ஆகாயத்திலா மேற்கொள்ள முடியும் என்றும், தனிமனிதனும் தியாகம் செய்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், ஒரு திட்டத்தையும் ஆராயாமல் ஆள் ஆளுக்கு எதிர்க்கிறார்கள். இவர்கள் என்ன விஞ்ஞானிகளா? ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் விரும்பவில்லை என்றால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது.
தமிழகத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்காமல் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழகத்துக்கு வரும் லட்சுமியை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். பாஜகவை சேர்ந்த இருவேறு தலைவர்களும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை கூறியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.