ராஜீவ் கொலை வழக்கில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது- மத்திய அரசு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு தங்களை விடுவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸை விடுவிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனுத்தாக்கல் செய்தது.
ஆயுள் தண்டனை என்பதே வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான் எனவே ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது தான் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது