வெள்ள பாதிப்பு ஆய்வு... ஜெயலலிதாவுடன் மத்திய குழு சந்திப்பு
சென்னை: தமிழகத்தில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழு இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர்.
முன்னதாக தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை அவர்கள் சந்தித்துப் பேசினர். முதல்வரைச் சந்தித்த பின்னர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைக் குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சீர் செய்ய ரூ. 8482 கோடி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். மேலும் மத்திய குழுவை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியிருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக ரூ. 940 கோடியை விடுவித்த மத்திய அரசு மத்திய குழு ஒன்றையும் நியமித்தது.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் வேளாண் அமைச்சக கூடுதல் ஆணையர் ஒய்.ஆர்.மீனா, நிதி அமைச்சக இணை இயக்குனர் எம்.எம்.சச்தேவா, குடிநீர் அமைச்சக முதுநிலை ஆலோசகர் ஜார்கர், சென்னையில் உள்ள மத்திய குடிநீர் அமைச்சக மூத்த மண்டல இயக்குனர் ரோஷினி, எரிசக்தித்துறை உதவி இயக்குனர் சுமித் கோயல், ஊரக மேம்பாட்டு அமைச்சக இயக்குனர் வி.சி.பேரா, பெங்களூரூவில் இருக்கும் மத்திய நீர்வள அமைச்சக மேற்பார்வை பொறியாளர் என்.எம்.கிருஷ்ணன் உன்னி, சென்னையில் இருக்கும் சாலைப் போக்குவரத்து அமைச்சக மண்டல இயக்குனர் டி.எஸ்.அரவிந்த் ஆகியோர் கொண்ட மத்திய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தது. இன்று முற்பகல் அவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். இதையடுத்து தங்களது ஆய்வுப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.
முன்னதாக இக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை இக்குழுவினர் பார்வையிடுவார்கள் என்று தெரிகிறது.