வெள்ள பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் விசூர் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய குழு ஆய்வு!!
சென்னை: தமிழக வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழு இன்று 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் விசூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு நடத்தியது.
தமிழகத்தைப் புரட்டி போட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் மத்திய அரசின் குழு சென்னை வந்தது. சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
பின்னர் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது. ஆனாலும் வெள்ள பாதிப்புகளை முழுமையாக பார்வையிடாமல் மேலோட்டமாக மத்திய குழு ஆய்வு செய்தது என்பது பொதுமக்களின் புகார்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளையும் மத்திய குழு ஆய்வு செய்தது. இன்று காலை பண்ருட்டி சென்ற இக்குழு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது.
இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் வெள்ள சேத விவரங்களை மத்திய குழு கேட்டறிந்தது.
இக்கூட்டம் முடிந்த பின்னர் வெள்ளத்தால் முழுவதுமாக அழிந்த விசூர் கிராமத்துக்கு சென்று மத்திய குழு பார்வையிட்டது. விசூரைத் தொடர்ந்து பெரியகாட்டுப்பாளையத்தில் முகாம்களில் தங்கியிருந்த மக்களிடம் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு கேட்டறிந்தது.
இதன் பின், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்திய சேதத்தை மத்திய குழு பார்வையிடுகிறது.