சன் டிவிக்கு பின்னடைவு! எஸ்.சி.வி.க்கான உரிமம் ரத்து!! மத்திய அரசு அதிரடி!!
சென்னை: சன் டிவி குழுமம் கேபிள் ஒளிபரப்பில் மேலாதிக்கம் செலுத்த மிகப் பெரும் பக்கபலமாக இருந்து வரும் சுமங்கலி கேபிள் விஷன் எனப்படும் எஸ்.சி.வியை நடத்துவதற்கான உரிமத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ள சன் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சன் டிவி குழுமம் ஏராளமான தொலைக்காட்சிகளை நடத்தி வந்த போதும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக கேபிள் ஒளிபரப்பு உரிமத்தையும் தம் வசமாக்கி வைத்திருந்தது. இதற்காக கல் கேபிள்ஸ் (Kal cables) என்ற பெயரில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தையும் பெற்றிருந்தது சன் டிவி குழுமம்.
இந்த கல் கேபிள்ஸ் நடத்தும் நிறுவனம்தான் சுமங்கலி கேபிள் விஷன். தமிழகம் முழுவதும் ஒருகாலத்தில் சுமங்கலி கேபிள் விஷன் மட்டுமே இருந்து வந்தது. இதனால் தமிழக அரசும் கேபிள் ஒளிபரப்பில் குதித்தது.
தற்போது சென்னையைத் தவிர பிற நகரங்களில் பெரும்பாலும் சுமங்கலி கேபிள் விஷன் மூலமே டிவி ஒளிபரப்பு நடைபெற்றும் வருகிறது.
இந்த நிலையில் அதிரடியாக கல் கேபிள்ஸ் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 17 கேபிள்ஸ் நிறுவனங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்த கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளிக்க வேண்டிய பாதுகாப்பு அடிப்படையிலான ஒப்புதல் மறுக்கப்பட்டதாலேயே உரிமங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
கல் கேபிள்ஸ் நிறுவனமானது முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மற்றும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமான டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குரியது.
சென்னை பெருநகரில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய 2012 ஜூன், 12ம் தேதி, நிரந்தர உரிமமும், இரண்டாம் நகர பகுதியில் டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய, 2013 மார்ச் 7ம் தேதி தற்காலிக உரிமமும் பெற்றுள்ளது. இந்த இரண்டு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்குள் எஸ்.சி.வி.யானது (கல் கேபிள்ஸ்) தனது ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான அறிவித்தலை ஸ்குரோலிங் மூலமாக சந்தாதாரர்களுக்கு அந்நிறுவனம் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை அயனாவரம் ஜோதிசங்கர் அண்ணாமலை, தஞ்சாவூரைச் சேர்ந்த காவிரி டிஜிட்டல் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமமும் ரத்து செய்யப்ப்ட்டுள்ளது.
தற்போது சென்னையில் கேபிள் டிவிக்களை ஒளிபரப்பு செய்ய, ஆதார் டிஜிட்டல் விஷன், அக் ஷயா டிஜிநெட் கேபிள் விஷன், தமிழக கேபிள் 'டிவி' கம்யூனிகேஷன், ஜாக் கம்யூனிகேஷன், ஏர் மீடியா நெட்வொர்க் ஆகியவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு நிரந்தர டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
பிற நகரங்களில் மேன் பவர் மீடியா நெட்வொர்க் (அரக்கோணம்), சுபம் டிஜிட்டல் கேபிள் சர்வீஸ் (ராஜபாளையம்), சூரியா டிஜிட்டல் பிராட்காஸ்டிங் (சேலம்), சிட்டி 'டிவி' (கோவை), நாகை டெலிவிஷன் நெட்வொர்க் (நாகப்பட்டினம்) ஆகியவற்றுக்கு நிரந்தர உரிமம் அளிக்கப்பட்டு உள்ளது.
தங்களது கல் கேபிள்ஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது. எந்த ஒரு முன்னெச்சரிக்கை விளக்க நோட்டீஸும் கொடுக்காமல் திடீரென உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.