வீறு கொண்ட மக்கள்.. விடாத போராட்டங்கள்.. பற்றி எரியும் மதுரை..மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடம்
ஜல்லிக்கட்டு விவகாரத்தின் மூலமாக மக்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மிகப் பெரிய பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
மதுரை: மதுரை மாவட்டம் ஒட்டுமொத்தமாக வீறு கொண்டெழுந்துள்ளது. எந்தப் பக்கம் போனாலும் கொந்தளிப்பு, எங்கு போனாலும் எதிர்ப்பு.. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திகிலடைந்து சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றன மத்திய அரசும் , மாநில அரசும்.
மக்களின் கொந்தளிப்பின் சூட்டைத் தாங்க முடியாமல், அதைத் தணிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளன. வரலாறு காணாத எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ள மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் மக்களை சமாதானப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன.
ஒரு ரயிலும் ஓடவில்லை
மதுரைக்குள் ஒரு ரயிலும் வர முடியவில்லை. மதுரையிலிருந்து ஒரு ரயிலும் போக முடியவில்லை. மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் சிறப்பு ரயிலை அறிவித்துப் பார்த்தனர். ஆனால் அதுவும் ஓடவில்லை.
நாலாபக்கமும் முற்றுகை
மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முற்றுகையிட்டுள்ளனர் மக்கள். எந்தப் பக்கம் போனாலும் மக்கள் கொந்தளிப்பைக் காண முடிகிறது. மதுரை நகரிலும் சரி, கிராமப்புறங்களிலும் சரி நிரந்தரமான சட்டம் வரும் வரையில் ஓய்வதில்லை என்று உறுதியாக உள்ளனர்.
கலெக்டர் பேச்சு பலன் தரவில்லை
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை முழுத் தோல்வியடைந்துள்ளது. மக்களின் எழுச்சியை அவரது பேச்சுவார்த்தை தணிக்க தவறி விட்டது.
திரும்பிப் போ
பேச்சுவார்த்தைக்கு வரும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் தரும் ஒரே பதில் நிரந்தரச் சட்டத்துடன் வாங்க, இல்லாட்டி திரும்பிப் போங்க என்பது மட்டுமே. இதனால் பேசவே முடியாத நிலையில் உள்ளனர் அதிகாரிகள்.
ஒரு காளையும் கிடையாது
முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியுங்கள், கோவில் காளைகளை மட்டுமாவது அனுமதியுங்கள் என்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மருகித் தவித்தனர் மக்கள். ஆனால் அதைக் கூட அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று ஒரு காளையாவது கொடுங்கள் என்று அரசு வந்து மக்களின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடம்
மக்களைப் புறக்கணித்தால், மக்களின் கலாச்சாரத்தை மதிக்கத் தவறினால், பாரம்பரியத்தைக் காக்கத் தவறினால், மக்களின் அபிலாஷைகளை அலட்சியப்படுத்தினால் இதுதான் பதிலடியாக கிடைக்கும் என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.