மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அசத்திய பள்ளி.. எப்படி வளர்ப்பது என்றும் விளக்கம்!
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தேவகோட்டை: சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் தர்மர் மற்றும் ம- 3 அமைப்பினர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகளை வழங்கிய ம-3
இதைத்தொடர்ந்து மரக்கன்றுகளை சுற்றுப்புற சுழலில் அக்கறை கொண்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஏற்படுத்தி உள்ள ம- 3 அமைப்பினர் வழங்கினார்கள். மாணவர்களுக்கு பூவரசு, கொன்றை, புங்கை ,வேம்பு போன்ற மருத்துவ குணம் நிறைந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
செடி வளர்ப்பு குறித்து விளக்கம்
விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் தர்மர் மாணவர்களுக்கு செடிகளை பாதுகாப்பாக வளர்ப்பது எவ்வாறு என்று விளக்கமாக கூறினார்.
மாணவர்களுக்கு பரிசுகள்
வீடுகளில் சென்று அவற்றை பாதுகாப்பாக வளர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது. கன்றுகள் வளர்ப்பதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்களே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு, நன்றாக மரம் வளர்க்கும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பெற்றோர் பாராட்டு
ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார். மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கி மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.