அசத்தும் அக்னி வெயில்… தமிழகத்தில் இன்று மழை பெய்யுமாம்!
சென்னை: அக்னி நட்சத்திர வெயில் 100 டிகிரிக்கு மேல் வறுத்தெடுத்து வரும் நிலையில் தமிழகம்,புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஆறுதல் தகவல் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். ஜூன், ஜூலையிலும் வெயில் வாட்டி வதைக்கும். இந்த வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோடையின் உச்சமான ‘அக்னி நட்சத்திரம்' நேற்று தொடங்கியது. சென்னையில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை படிப்படியாக வெயில் அதிகரித்து மதிய நேரத்தில் சுட்டெரித்தது. சாலைகளில் கானல் நீர் ஓடியது.
சதமடித்த வெயில்
அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் 94.28 டிகிரி வெயில் பதிவாகியது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருச்சியில் 100.94 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
வெப்பச்சலனம்
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 மணிநேரத்தில் மழை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, தென்மேற்கு வங்க கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளார்.