வெப்பம் படிப்படியாக குறையும்... வெப்பச் சலனத்தால் மழைக்கும் வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் வெப்பம் படிப்படியாகக் குறையும் என்றும், வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தைவிட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து விட்டது. ஆனால், அதனை சமன் செய்வது போல, கத்தரி வெயிலில் கோடை மழை பெய்து பூமியை குளிர்வித்தது.
இந்நிலையில், நேற்றுடன் கத்தரி வெயில் நிறைவு பெற்று விட்டது. ஆனபோதும், தமிழகத்தின் பல பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலும், வேறு சில பகுதிகளில் அதற்கு நேரெதிராக மழையும் என வானிலை உள்ளது.
வேலூர் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, தளியில் 5 செ.மீ. மழையும், சேலம் மற்றும் காவேரிபாக்கம் பகுதிகளில் 4 செ. மீ., மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில், "அடுத்த 2 நாள்களில் தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறையும். அடுத்த 3 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடதமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக இன்று ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.