தாய்மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம்.. வெங்கய்யா நாயுடுக்கு ஸ்டாலின் பதிலடி!
வேலூர்: தாய்மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் வெங்கய்யா நாயுடு தனது தாய் மொழியை மாற்றிவிட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தனது தாய் மொழி இந்தி என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தாய்மொழியை மாற்றிவிட்டாரா?
இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஆந்திராவில் பிறந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தனது தாய்மொழியை மாற்றி விட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்.
தாயை மாற்றுவதற்கு சமம்
மேலும் தாய்மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம் என்றும் மு.க ஸ்டாலின் கூறினார். இந்தி திணிப்பை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருபோதும் பின்வாங்காது
ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில், தி.மு.க., ஒருபோதும் பின்வாங்காது என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார். தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக எப்போதும் தி.மு.க., பாடுபடும் என்றார்.
வெகு தொலைவில் இல்லை
பேரறிஞர் அண்ணா கூறியது போல், வெற்றி, தோல்வியை சமமாக, பாவிப்போம் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெ. மரணம் - விசாரணை
ஆட்சி அமைத்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் எச்சரித்தார். இந்தக்ககூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.