மாஜி அமைச்சர் மீது 3 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. சூடு பிடிக்கும் பாலியல் வழக்கு!
திருச்சி: முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிக்கி அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறை சென்றுள்ள நிலையில் ஏராளமான அதிமுகவினர் இந்த கொலை வழக்கில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சியில் முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான பரஞ்சோதியும், முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகனும், திருச்சி முன்னாள் துணை மேயருமான ஆசிக் மீரானும்தான் பாலியல் வழக்குகளில் சிக்கி படாதபாடுபடுகின்றார்கள்.
2 வது மனைவி புகார்
முன்னாள் அதிமுக அமைச்சரும் திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பரஞ்சோதி மீது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் வசிக்கும் டாக்டர் ராணி, திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 2011-ம் ஆண்டு பாலியல் மற்றும் மோசடி புகார் செய்திருந்தார். அந்த புகாரில், "பரஞ்சோதி தன்னை 2-வது மனைவியாக திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு ஏமாற்றி பணம், நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்ட தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
கண்டு கொள்ளாத போலீஸ்
இந்த புகார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்ததால் நீதிமன்றத்தை அணுகி வழக்கு பதிவு செய்ய ராணி உத்தரவு பெற்றார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு ஏமாற்றுதல், மோசடி, பெண் வன்கொடுமை உட்பட 7 பிரிவு களில் பரஞ்சோதி மீது போலீஸார் 6.12.2011-ல் வழக்கு பதிவு செய்தனர்.
பரஞ்சோதியின் பதவி பறிப்பு
இந்நிலையில் அப்போது தமிழக அமைச்சராக இருந்த பரஞ்சோதியிடமிருந்து அமைச்சர் பதவி மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஆகியவை பறிக்கப்பட்டன. திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4-ல் பரஞ்சோதி மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
நீதிமன்றம் உத்தரவு
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது என்பதால் இந்த வழக்கின் விசாரணையை ஸ்ரீரங்கம் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் நேரடியாக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பரஞ்சோதி எழுதிய கடிதங்கள்
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கை பல்வேறு போலீஸ் உதவி கமிஷனர்கள், சில மாஜிஸ்திரேட்டுகள் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக பரஞ்சோதி எழுதிய கடிதங்கள் கையெழுத்து ஒப்பீடு பரிசோதனைக்கு அனுப்பி, ஓரிரு வாரங்களுக்கு முன் முடிவுகள் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்ஜாமின் கேட்ட பரஞ்சோதி
எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கடந்த வாரம் திருச்சி நீதிமன்றத்தில் பரஞ்சோதி ஆஜராகி முன் ஜாமின் பெற்றார். நேற்று இந்த வழக்கின் விசாரணை குற்றவியல் நடுவர் எண் 4-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விவரம் புகார்தாரரான ராணி தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.
மே.15ல் வழக்கு விசாரணை
இதையடுத்து குற்றவியல் நடுவர் வேல்மயில், இந்த வழக்கை கூடுதல் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும் அங்கு மே 15-ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்தார். இந்த வழக்கு விவரத்தை அறிய டாக்டர் ராணி நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
நீதி வெல்லும்
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த டாக்டர் ராணி, ''போலீஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் இப்போதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் பலமுறை வழக்கு தொடர்ந்து நியாயம் கேட்டேன். ஒரு முறைக்கூட நீதிக்கு கட்டுப்பட்டு பரஞ்சோதி நடந்துகொள்ளவில்லை. இப்போதுதான் நம்பிக்கை பிறந்துள்ளது. நியாயம் கிடைக்க காலதாமதம் ஆனாலும் நிச்சயம் நீதி வெல்லும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது என்று கூறினார்.
ஆசிக் மீராவிற்குப் பின்
இதனிடையே பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரானுக்கும், அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட துர்காவுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. தற்போது பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியும், சிக்கி நீதிமன்ற விசாரணைக்குள்ளாகி இருப்பதால் அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மன்னிப்பே இல்லை
ஊழல் வழக்கில் சிக்கினாலும் அதிமுக தலைமையின் கோர்ட்டில் மன்னிப்பு உண்டாம். ஆனால், பாலியல் வழக்கில் சிக்கினால் கல்தாதானாம். அதுதான் அதிர்ச்சிக்கு காரணம் என்கிறார்கள்.