மக்களிடம் ரூ.46 கோடி மோசடி: பெண் தொழில் அதிபர், ஜோடி நம்பர் 1 'வின்னர்' கைது
சென்னை: பொதுமக்களை ஏமாற்றி ரூ.46 கோடி ரொக்கத்தை சுருட்டிய பெண் தொழில் அதிபர் மற்றும் நடன நடிகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு பிருந்தாவன் நகரில் உள்ள முல்லைத் தெருவில் வசித்து வருபவர் நர்மதா(34). தொழில் அதிபர். கணவரை பிரிந்து வாழும் அவருக்கு மகனும், மகளும் உள்ளனர். அவர் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவரது நிறுவனம் மீது சென்னை சூளைமேடு, வீரபாண்டியன் நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
தொழில் அதிபர் நர்மதா கடந்த 2010-ம் ஆண்டு முதல், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம். எங்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நர்மதா ஒரு தகவலை அனுப்பினார். வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று நர்மதா அறிவிப்பு வெளியிட்டார்.
வாடிக்கையாளர் முதலீடு திட்டம் என்று அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித் தரப்படும் என்றும், அத்துடன் தங்க காசு பரிசாக கிடைக்கும் என்றும், ஒரு ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் நர்மதா கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
செல்போன் எஸ்.எம்.எஸ். அறிவிப்புகளை தொடர்ந்து நாங்கள் நர்மதாவை நேரில் சென்று பார்த்து பேசினோம். அவரது அறிவிப்பு மட்டும் கவர்ச்சியாக இல்லை. அவரது கவர்ச்சியான பேச்சும் எங்களை அவரது மோசடி வலையில் சிக்க வைத்து விட்டது.
லட்சம், லட்சமாக அவரிடம் பணத்தைக் கொண்டு கொட்டினோம். நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்க காசு பரிசாக கொடுத்தார். இதனால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், நர்மதாவிடம் முதலீடு பணத்தை கோடி, கோடியாக கொட்டினார்கள்.
ஒரு சிலருக்கு முதலீட்டு பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுத்தார். பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார். பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வங்கி காசோலை பெற்றவர்களுக்கு நெற்றியில் பட்டை நாமம் போட்டது தான் மிச்சம். காசோலைகளுக்கு நர்மதாவின் வங்கி கணக்கில் பணம் இல்லை. போலி காசோலைகளாக திரும்பி வந்தன.
எங்களது வயிற்றில் அடித்து கொள்ளை அடித்த முதலீட்டு பணத்தில், நர்மதா சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். அவரது மோசடி லீலைகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ.46 கோடி வரை இருக்கும். நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை பார்க்கும் பரத்குமார் (24) மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது மோசடி லீலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்மதா மற்றும் பரத்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது,
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கூர் கிராமத்தைச் சேர்ந்த நர்மதா முகலிவாக்கத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அவரது தந்தை ஓய்வு பெற்ற அறநிலையத் துறை அதிகாரி. பரத்குமார் பி.எஸ்.சி. படித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார் பரத். நர்மதாவிடம் ரூ.20 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்து வந்துள்ளார். நர்மதாவின் மோசடிகளுக்கு பரத் துணை போயுள்ளார்.