தூத்துக்குடியில் மக்களின் பணத்தை ஸ்வாஹா செய்த நிறுவனம்: பங்குதாரர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதியின்றி செயல்பட்ட மார்க்கெட்டிங் நிறுவனத்தில் போலீசார் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றினர். இதன் பங்குதாரரும் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வாரந்தோறும் பொது மக்களிடம் இருந்து தலா ரூ.100 வீதம் 10 வாரம் வசூலிக்கப்பட்டு பின்னர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கவர்ச்சியான பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவித்தது. பரிசு விழுந்தவர்கள் அதன் பிறகு பணம் கட்ட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
இதை கேள்விப்பட்டு தூத்துக்குடியில் மட்டும் பல ஆயிரம் பேர் இந்த நிறுவனத்தின் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் இருந்து இந்த நிறுவனம் தலா ரூ.100 வசூலித்துள்ளது. இறுதியில் குலுக்கல் அறிவித்து அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் பிரதி ஞாயிறுதோறும் குலுக்கல் நடத்தி வந்துள்ளனர். இதில் பலருக்கு டிவி, பிரிட்ஜ், சோபா போன்றவை பரிசுகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல் அவர்களுக்கு குலுக்கலுக்காக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறி வாரத் தவணைகளையும் பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் பரிசு விழுந்தும் யாருக்கும் பரிசுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து டவுன் போலீசாருக்கு புகார் சென்றதால் ஏஎஸ்பி அணுசக்தி குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வரும் தகவல் கிடைத்ததும் அதன் பங்குதாரர்கள் தங்கராஜ், மணிகண்டன் ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். பின்னர் நடத்திய சோதனையில் அங்கு பொதுமக்களுக்கு கொடுக்க வைத்திருந்த ஏராளமான பைக், டிவி, பிரிட்ஜ், சோபா, செல்போன் போன்றவை கைப்பற்றப்பட்டன. மேலும் இன்னொரு பங்குதாரரான குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன் எ்ன்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.