ஆஸ்திரேலியரின் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்த சென்னை இளைஞர்
சென்னை: ஆஸ்திரேலியரின் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் சென்னை இளைஞர் டேனியல் சூர்யா.
சென்னையைச் சேர்ந்தவர் டேனியல் சூர்யா என்ற இளைஞர். இவர், கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, புதிய சாதனை முயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதாவது, 101 மணி நேரத்தில் சுமார் 2100 துணிகளை இஸ்திரி செய்ய வேண்டும் என்பது தான் அவரது இலக்கு.
இந்த மராத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ம் தேதி காலை டேனியல் தொடங்கினார். சென்னை மேயர் சைதை துரைசாமி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
லயன்ஸ்கிளப் A1, A6 மாவட்டங்கள் சார்பில் லயன்ஸ் கவர்னர்கள் குமார், குணராஜா, மாவட்ட தலைவர்கள் தியாகராஜா, முரளி, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சாதனை நிகழ்ச்சியை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
சாதனை நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் மதியம் 1 மணிக்கு கின்னஸ் சாதனையான 2000 துணிகளுக்கு மேல் ஐயர்னிங் செய்து டேனியல் சூர்யா புதிய உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன்னர் இங்கிலாந்தை சேர்ந்த கரேத் சாண்டர்ஸ் என்ற இளைஞர் 100 மணி நேரத்தில், இரண்டாயிரம் துணிகளை இஸ்திரி செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது இந்தச் சாதனையை டேனியல் முறியடித்துள்ளார்.
ஏற்கனவே இருந்த கின்னஸ் உலக சாதனையை டேனியல் சூர்யா முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். தொடர் ந்து 5 நாட்கள் இந்த சாதனை செய்ய இருக்கிறார். இந்த 5 நாளில் சுமார் 1 கோடி பேர்களிடம் கண் தான உறுதி மொழி பெற வேண்டும் என்பதே இவர் விருப்பமாம்.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவருமான தியாகராஜா கூறுகையில், "கண் தான விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாதனை நிகழ்ச்சி முடியும் போது ஒரு கோடி பேராவது கண் தான உறுதி தர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
முதல் முதலாக வெளி நாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை ஒரு இந்தியர் குறிப்பாக தமிழர் முறியடித்ததை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்றார்.
இந்த சாதனை முயற்சியின் கூடவே பிரபலங்கள் பங்கேற்று கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். ரத்ததானம், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.