பயணிகளை தவிக்கவிட்டு பறந்த ஏர் இந்தியா விமானம்!: சென்னை ஏர்போர்ட் அதிகாரியின் விளக்கம் இது!
சென்னை: டிக்கெட்டை சரியாக படித்து பார்த்தால் விமானத்தை தவறவிடும் குழப்பம் நேரிடாது என்கிறார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள்.
சென்னையில் இருந்து இன்று காலை பெங்களூர் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்தால், 15 பயணிகள் தவித்தது குறித்து 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி குறித்து சென்னை விமான நிலைய அதிகாரி வேணுகோபால் தெரிவித்த கருத்து வருமாறு:
பெங்களூர் வழியாக திருவனந்தபுரம் சென்று, பிறகு மாலே நாட்டுக்கு செல்லும் விமானம் என்பதால் சர்வதேச முனையத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்புவது வழக்கம். உள்நாட்டு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் உள்நாட்டு முனையத்தில் இருந்துதான் கிளம்பும்.
பயணிகள் டிக்கெட்டை சரியாக படித்து பார்த்தாலே இந்த குழப்பம் நேரிடாது. ஆனால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட்டை சரியாக படித்து பார்ப்பது கிடையாது. ஏனெனில் டிக்கெட்டிலேயே எந்த முனையத்தில் இருந்து விமானம் புறப்படும் என்ற விவரம் இடம் பெற்றிருக்கும்.
மேலும், சர்வதேச முனையத்திற்கு செல்வதற்கு, உள்நாட்டு முனையத்தில் இருந்து பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. இது இலவச சேவை. அந்த காரில் பயணித்தால் இரண்டே நிமிடங்களில் சர்வதேச முனையத்திற்கு சென்று சேர முடியும்.
நடந்து சென்றால் கூட ஐந்து நிமிடங்கள்தான் ஆகும். எனவே பயணிகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஏர் இந்தியா மட்டத்திலேயே இந்த பிரச்சினை தீர்த்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், பயணிகள் பாதிக்கப்பட்டதாக ஏர்போர்ட் ஆணையத்துக்கு புகார் வரவில்லை. ஒருவேளை புகார் எங்களிடம் வந்திருந்தால் தக்க உதவிகள் செய்திருப்போம் என்றார்.