மனைவியுடன் வந்த சிபிஐ தலைவர் ராஜாவிடம் அடாவடியாக பேசிய போலீஸ் அதிகாரி.. மன்னிப்பு கேட்டார்
சென்னை: டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான டி.ராஜா மற்றும் அவரது மனைவி ஆனி ஆகியோரிடம் அடாவடியாக வாக்குவாதம் செய்த போலீஸ் அதிகாரி பின்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டி.ராஜா நேற்று டெல்லி செல்வதற்காக தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தார். விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு செல்வதற்கான நுழைவு வாயிலை அடைந்த அவர், விமான டிக்கெட்டுகளையும், அடையாள அட்டைகளையும் அங்கு காவலுக்கு நின்றிருந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டரிடம் காண்பித்தார்.
அதில் திருப்தி அடையாத அந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்., டி.ராஜாவிடம் இருந்த விமான டிக்கெட்கள் தொடர்பாக சில குறுக்கு கேள்விகளை கேட்டு, வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அங்கிருந்த உயரதிகாரிகளுக்கு தகவல் வர, விரைந்து வந்த அவர்கள் அங்கு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹன்ஸ்குமாரை கண்டித்து, நடந்த சம்பவத்துக்காக டி.ராஜாவிடமும் அவரது மனைவியிடமும் மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து அந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் ராஜாவும், அவரது மனைவியும் உரிய விமானத்தைப் பிடித்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.