குழந்தைகளுக்கு மது ... அதிகரிக்கும் குடிவெறியர்களின் சைக்கோ கலாசாரம்
சென்னை: தமிழகத்தில் மது குடிக்கும் கலாசாரம் புற்றுநோயைப் போல விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இதனால் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பெரியவர்கள் மது குடிப்பதே தவறு என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கு மது கொடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சைக்கோதனங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அருகே விளையாடச் சென்ற குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த போதை ஆசாமிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் பாத்திமா, வாலிபர் ஒருவருடன் ஜாலியாக இருப்பதற்காக தனது இரண்டு குழந்தைகளுக்கு மது கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விட்டன. காலையில் வழக்கம்போல் குழந்தைகள் விழிக்கவில்லை என்பதால் பதட்டம் அடைந்த பாத்திமா, அரசு மருத்துவமனைக்கு அவர்களை தூக்கிக்கொண்டு ஓடி வந்தார். இதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்து வந்து.
தாய்மாமன் கைது
கடந்த ஆண்டு திருவண்ணாமலை அருகே, கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து மது குடிக்கும் இளைஞர்கள் 3 வயது மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து மதுவை குடிக்க வைத்த தாய்மாமன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் 5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனுக்கு அவனது தந்தை ஒப்புதலுடன் மது குடிக்க கற்றுத் தருவதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைக்கு மது கொடுத்தது வைரல் ஆனது. அதில், வீட்டின் அறையில் அமர்ந்துள்ள 10 மாதங்களே ஆன குழந்தைக்கு பெற்ற தந்தையே பீர் ஊற்றிக்கொடுத்தார். குழந்தை தடுமாறிக்கொண்டே மது குடிக்க முயல்வதை பார்த்து அதன் தந்தையும், அக்காட்சியை செல்பேசி வீடியோவில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.
பெரியவர்கள் மது குடிப்பதே தவறு என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 மாதக் குழந்தைக்கு, குற்ற உணர்வே இல்லாமல், அதன் தந்தையே மது புகட்டுவதும், அதை அக்குழந்தையின் தாயாரே வீடியோ எடுத்து வெளியிடுவதும் நினைத்துப் பார்க்க முடியாத சீரழிவுகள் ஆகும்.
இதுபோன்ற கயவர்களை தண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் சென்னை மேனாம்பேடு வ.உ.சி நகரில் வசிக்கும் தனலெட்சுமியின் இரண்டரை வயது மகன் தானுவுக்கு செல்வம் மற்றும் பழனி ஆகியோர் மது ஊற்றி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செல்வம், பழநி ஆகிய இருவரையும் கைது செய்த அம்பத்தூர் போலிசார் அம்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.