ஜோடி போட்டு பைக் திருடிய மாமன் - மச்சான்... சிசிடிவி காட்சியால் சிக்கினர்... 22 பைக்குகள் மீட்பு!
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பைக் திருடி வந்த இருவரை சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக சென்னை அசோக்நகர், கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் வெளியே வைக்கப்படும் பைக்குகள் தொடர்ந்து திருட்டு போய் வந்தன. இரவு நேரம் என்று மட்டுமில்லாமல், பகல் நேரத்திலும் இந்த திருட்டு நடந்து வந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து தி.நகர் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில் அசோக்நகர் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பைக் திருடர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது கேகே நகர் பகுதியில் பைக் ஒன்றை மர்மநபர்கள் திருடிச்சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. அந்தக் காட்சிகளில் பதிவாகியிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் தேடத் தொடங்கினர்.
போலீசாரின் தீவிர வாகன சோதனையில், மீண்டும் பைக் ஒன்றைத் திருட வந்தபோது அவர்கள் இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுப்பேட்டையை சேர்ந்த சிக்கேந்தர் மற்றும் திருநின்றவூர் சேர்ந்த சமீர் பாஷா என்பது தெரியவந்தது.
மேலும், இருவரும் உறவு முறையில் மாமன் - மச்சான் என்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டாகச் சேர்ந்து பைக்குகளைத் திருடி, அதனை உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதையே இருவரும் தொழிலாக செய்து வந்துள்ளனர்.
தற்போது அவர்களிடம் இருந்து 22 பைக்குகளை மீட்டுள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.