திருச்சி, கடலூரில் பரவலாக மழை.. சென்னையில் பல இடங்களில் கனமழை
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமான மழை பெய்தது
வளசரவாக்கத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. மனப்பாக்கம் பகுதியில் இடியுடன் கனமழை பெய்ததது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதேபோல் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவெறும்பூர், அரியமங்கலம் காட்டூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கும்பகோணம், அம்மாசத்திரம், சத்தீஸ்வரம் தாராசுரம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் 4 மணி நேரமாக மழை கொட்டி வருகிறது.
Recommended Video
கடலூர் மாவட்டம் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.