சென்னையில் தலை விரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம்... தீர்க்க முடியாமல் திணறும் அரசு
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக குடிநீர்வாரியமும் உறுதிப்படுத்தியுள்ளது. மாற்று வழியில்
சென்னை: சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளித்து பொதுமக்களின் சிரமங்களைத் தீர்க்க முடியாமல் குடிநீர் வாரிய அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத பெரும் வறட்சியை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் சந்திக்கத் தொடங்கியுள்ளன. இதனால், பல இடங்களில் மக்கள் குடிநீருக்கு, அலைமோதி வருகின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
தலைநகர் சென்னையில், குடிநீர் விநியோகம் கடந்த சில மாதங்களில், பாதியாகக் குறைந்துள்ளது. தேவையை விட, மிகக் குறைந்த அளவுக்கே குடிநீர் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, சென்னை பெரு நகர மாநகராட்சி குடிநீர் விநியோக வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில், 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறையே குழாய் வழியாக, குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த சேவையும் வரும் நாட்களில் தொடருமா எனச் சொல்ல முடியாது.
பாதி அளவே குடிநீர் விநியோகம்
தினசரி, சென்னை முழுவதும் 830 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும் நிலையில், அதில் பாதி அளவே அதாவது 450 முதல் 470 மில்லியன் லிட்டர் நீரையே விநியோகித்து வருவதாக, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு லாரி தண்ணீர் ரூ. 1,500
அரசு சார்பாக, சென்னையில் 7000 குடிநீர் லாரிகள் இயக்கப் படுகின்றன. இது போதாது என்பதால், பொதுமக்கள் பலர் தனியார் லாரிகளை சார்ந்தே உள்ளனர். அவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு லாரி தண்ணீரை, 1,500 ரூபாய்க்கு விநியோகிக்கின்றனர்.
மாதம் ரூ.5000 கூடுதல் செலவு
பொதுமக்கள் சிலர் கூறுகையில், குடிநீருக்காக, மாதந்தோறும் சராசரியாக, ரூ.5000 வரை செலவிட நேரிட்டுள்ளதாக, தெரிவிக்கின்றனர். பல வீடுகளில் சமையல் பாத்திரங்களை கழுவவும், அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவுமே தண்ணீர் இல்லாத நிலை நிலவுகிறது.
கடுமையான பாதிப்பில் சராசரி மக்கள்
வசதி படைத்தவர்கள், பணத்தை செலவழித்து, நீர் வாங்க முடியும். ஆனால், சராசரி மக்களின் நிலை மிகவும் கொடுமையாக உள்ளது. சாலைகளில் தண்ணீருக்காக அவர்கள் அலைவது அன்றாட காட்சியாக உள்ளது.
சமாளிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்
சென்னை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட நீர் தேவையை சமாளிப்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளதென்று, குடிநீர் வாரிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தவறிய தமிழக அரசு
பருவமழை பொய்த்துவிட்டது. ஆனால், கடந்த ஆண்டுகளில் பெய்த மழை நீரை சேகரித்து வைக்க, தமிழக அரசு தவறிவிட்டது. 2015ம் ஆண்டு, செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பு ஏற்பட்டபோது வெளியேறிய நீரை, சேமித்து வைத்திருந்தாலே, தற்போதைய பஞ்சத்தை எளிதாக சமாளித்திருக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.