20 ஆண்டுகளுக்குப் பின் ஈரமான செப்டம்பர்... இரவோடு இரவாக சென்னையை நடுங்க வைத்த மா மழை!
சென்னை : சென்னையில் நேற்றிரவு காற்றுடன் பெய்த கனமழை 82 மி.மீ அளவிற்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். இன்றும் மழை நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் மாதத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதங்களில் லேசான அளவு மழை பெய்யும், புரட்டாசி பிறந்த உடனே மழைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிடும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் மழையுடனே தொடங்கியது. சென்னைவாசிகளை இந்த செப்டம்பர் மாத மழை புழுக்கத்தை குறைத்து குளிர்ச்சியடைய வைத்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு மற்றும் அதிகாலையில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.
சென்னை மழை
வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போல நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட சென்னையில் நேற்றிரவு 10 மணியில் தொடங்கி நள்ளிரவு வரை நிதானமாக மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. நேற்றிரவு அதிகபட்சமாக 82 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெமர்மேன் பிரதீப் கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பின் மழை
சென்னையில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் மாதத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2ம் தேதி 73 மிமீ மழை அளவு பதிவான நிலையில் 28ம் தேதி இரவு தொடங்கி அதிகாலை வரை 82 மிமீ மழை பதிவானதாக அவர் தனது தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மழை அளவு
29ம் தேதி 8.30 மணிவரை பதிவான மழை அளவு மி.மீட்டரில்
அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி - 97
நுங்கம்பாக்கம் - 82
மீனம்பாக்கம் - 77
செம்பரம்பாக்கம் - 77
காஞ்சிபுரம் - 50
ஈரமான செப்டம்பர்
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு தென்மேற்கு பருவகாலமான செப்டம்பர் மாதத்தில் அதிக பட்ச மழை பதிவாகியுள்ளாத கூறும் வெதர்மேன், இது ஈரமான செப்டம்பர் மாதம் என்று பதிவிட்டுள்ளார். 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 314.50 மிமீ மழை பதிவானது. செப்டம்பர் 12ம் தேதி 1996ம் ஆண்டு மிக அதிகபட்சமாக 167 மிமீ மழை பெய்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மழை நீடிக்கும்
2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் 286 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதுவரை 296 மிமீ மழை சென்னையில் பதிவாகியுள்ளது. இது ஈரமான செப்டம்பர் மாதம் என்றும் பதிவிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப். இன்று இரவும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.