யாருக்குக் கிடைக்கும் "ரிப்பன்"?
சென்னை : சென்னை மாநகராட்சிக்கு 2ம் கட்டமாக அக்டோபர் 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கடந்த முறை அமோக வெற்றி பெற்று 10 மாநகராட்சிகளையும் அதிமுக கைப்பற்றியது. இந்த முறை 12 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி.(பொது) பிரிவினருக்கும், வேலூர் மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி.(பெண்களுக்கும்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 17ம்தேதி முதற்கட்டமாக நடைபெற உள்ளது.
அக்டோபர் 19 தேர்தல்
சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 273 பேரூராட்சிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,221 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 48,684 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6,080 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு அக்டோபர் 19ம்தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
சென்னையில் 200 வார்டுகள்
பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியில் தற்போது 200 வார்டுகள் உள்ளன. இதில் 16 வார்டுகள் எஸ்.சி.(பொது), 16 வார்டுகள் எஸ்.சி.(பெண்கள்), 92 வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்களுக்கு 108 வார்டுகள் கிடைத்துள்ளது. 124 வார்டுகள் தவிர மீதமுள்ள 76 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு உச்சவரம்பு
சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகையாக ரூ.90 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 91,098 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதில் 62,337 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 28,761 வாக்குச் சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்படும். சென்னை மாநக ராட்சியில் மட்டும் 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
மாலை 5 மணிவரை வேட்புமனு தாக்கல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்களிடம் அந்தந்த கட்சி தலைமை விருப்ப மனுக்களை பெற்று வரும் வேளையில் இன்று முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக 3 மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
ரிப்பன் மாளிகை யாருக்கு?
199ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக என மாறி மாறி மேயர் பதவியை கைப்பற்றி வருகின்றன. கடந்த முறை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது. இம்முறை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. அதிக கவுன்சிலர்கள் எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அவர்களே மேயரை தேர்ந்தெடுப்பார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்ய மழை வெள்ளம் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால் இம்முறை ரிப்பன் மாளிகையில் மேயராக அமரப்போவது எந்தக்கட்சி கவுன்சிலர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.