ரமணன் சொன்னது பலிச்சுருச்சு – சென்னையில் காலை முதல் கொட்டும் “மழை”யால் குளிர்ந்த மக்கள்!
சென்னை: கோடை வெப்பத்தில் தவித்து வந்த சென்னை மக்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் இன்று காலை முதல் பெய்து வருகின்ற "திடீர்" மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில தினங்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் சற்று குறையத்தொடங்கி இன்று மழை பெய்யத் துவங்கியுள்ளது.
"அக்னி" நட்சத்திரம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இன்று தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், காலை முதலே சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளிலும், மற்ற சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. பட்டினப்பாக்கம், சாந்தோம், திருவான்மியூர், அடையாறு, தேனாம்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், "வங்கக்கடல் காற்று மற்றும் அரபிக்கடல் காற்று ஆகியவை ஒன்றாக இணைந்துள்ளது. இதன் காரணமாக மேலடுக்கில் நிலவும் காற்றின் போக்கு மழை பெய்தவற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.