நெடுவாசல் போராட்டம்.... மெரினாவில் கார்கள், இருசக்கர வாகனங்களில் தீவிர சோதனை
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால் மெரினாவில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மெரினாவில் கூட இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியுள்ளதை தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீஸார் அவ்வழியாக செல்லும் கார்கள், இருசக்கர வாகனங்களை தீவிர சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை ஏப்ரல் 12-ம் தேதி துவக்கினர். 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், பெண்கள் தங்கள் பகுதியில் விளைந்த காய்கறிகள் மற்றும் இளநீர், பலா, வாழைத்தார், பப்பாளி உள்பட கனிகளை இலையில் படையலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் பதாகைகளை ஏந்தி, ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். எனினும் கிராம மக்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.
இதனிடையே மெரினா கடற்கரை சாலையில் 200-க்கும் மேற்பட்டட போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று நெடுவாசல் கிராம மக்களுக்காக போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து வழக்கத்தை விட அதிகமாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் திறக்க போராடியவர்கள் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மூடக்கோரி மெரீனாவில் திரண்டு விடக்கூடாது என்பதில் சென்னை நகர காவல்துறையினர் படு கவனமாகவே உள்ளனர்.
இதன் எதிரொலியாக சென்னை மெரினாவுக்கு வரும் இளைஞர்களின் செல்போனை தீவிரமாக போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் உள்ள தகவல்களை ஆராய்ந்த பிறகே கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இருசக்கர வாகனம், கார்களை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.