சென்னை மாநகராட்சி பட்ஜெட்: சைதை துரைசாமி தாக்கல் செய்தார் - புது வரிகள் இல்லை!
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2015 - 16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி இன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதில், மேயர் சைதை துரைசாமி 2015-16ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம்கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களாக சைதை துரைசாமி கூறியதாவது :-
- மாநகராட்சியின் வருவாய் இனங்களில் முக்கிய பங்கு வகிப்பது சொத்து வரி. கடந்த நிதி ஆண்டில் ரூ.600 கோடி சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிதி ஆண்டிலும் அதே அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த பட்ஜெட்டில் தொழில் வரி ரூ.250 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிதி ஆண்டிலும் தொழில் வரி வருவாய் அதே அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் முத்திரை தாள் மீதான கூடுதல் வரி வருவாய் இந்த ஆண்டு ரூ.200 கோடியாக இருக்கும். கேளிக்கை வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.25 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அரசு வரி தொகுப்பில் இருந்து ஒதுக்கப்படும் வருவாய் ரூ.600 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் உரிமம், கட்டிட உரிமம், அங்காடி உரிமம், வாகன நிறுத்த கட்டணம் போன்ற பிற வருவாய் இனங்களின் முலம் ரூ.716.46 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
- மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசிடம் மானியம் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகள், சாலை பராமரிப்பு பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், புதிய பூங்காக்கள் உருவாக்கும் பணிகள் ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.1232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஜவகர்லால் நேரு மத்திய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்காக ரூ.30 கோடியும், உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் விரிவாக்கம் செய்யப்பட்ட மழை நீர் வடிகால் திட்டத்துக்கு ரூ.300 கோடியும், இதர பணிகளுக்கு ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- புதிய பாலங்கள் கட்டுமான பணிகள், விரிவாக்க பணிகளுக்கு ரூ.42 கோடி.
- மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் புதிய மின் விளக்குகள் அமைக்கவும், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தவும் ரூ.150 கோடி.
- பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை, வணிக வளாகங்கள், மண்டல பகுதி-வார்டு அலுவலகங்கள் கட்டும் பணிக்கு ரூ.122 கோடி.
- மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமித்தது. உபகரணங்கள் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு ரூ.7 கோடி.
- மருத்துவ பரிசோதனை கூட உபகரணங்கள், கொசு புகை எந்திரங்கள் போன்ற சுகாதார மேம்பாட்டுக்கு ரூ.5.50 கோடி.
- மெரினா கடற்கரையை ஒட்டிய சாலை பகுதியில் மேம்பாட்டு பணிகள் செய்யவும், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலக தரம் வாய்ந்த சாலைகள் அமைத்தல், நடைதொடர் மேம்பாலம் அமைத்தல் போன்ற சிறப்பு திட்டங்களுக்கு ரூ.90 கோடி.
- சென்னை மாநகராட்சியில் திறந்த வெளி இடங்களில் புதிய பூங்காக்கள், விளையாட்டுத் திடல் அமைத்தல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு முதல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.60 கோடியாக இருக்கும்.
- மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்த ஆண்டும் ரூ.2 கோடி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக வெளிநடப்பு :
இதனிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்களை தடுப்பது, குடிநீர் பிரச்னையை தீர்ப்பது என்பன உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.