தக்காளி, முட்டைகோஸ் வாங்கி விட்டு "அம்மா" தியேட்டரில் படம் பார்க்கலாம்.. சென்னையில்!
சென்னை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, அம்மா வாரச் சந்தை மற்றும் அம்மா தியேட்டர் என்ற இரண்டு புதிய ஐட்டங்களை சென்னை மாநகராட்சி விரைவி்ல் அமல்படுத்தவுள்ளது.
அதாவது அம்மா வாரச் சந்தையுடன் இணைந்த அம்மா திரையரங்கத்தை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள அம்மா உணவகம், மருந்தகம், குடிநீர், சிமெண்ட் வரிசையில் இந்த அம்மா தியேட்டர் மற்றும் அம்மா வாரச் சந்தை ஆகியவையும் இணையவுள்ளன.
மண்டலத்துக்கு ஒரு அம்மா தியேட்டர்
பரந்து விரிந்துள்ள சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் ஒரு மண்டலத்துக்கு ஒரு தியேட்டர் என திட்டமிட்டுள்ளனர். எனவே மொத்தம் 15 அம்மா தியேட்டர்கள் நிறுவப்படவுள்ளன.
கூடவே வாரச் சந்தையும்
இந்த அம்மா தியேட்டருடன் சேர்த்து அம்மா வாரச் சந்தையும் அமைக்கப்படவுள்ளது.
தி.நகரில்
இதில் தியாகராயநகர் பஸ்நிலையம் அருகே வணிக வளாகங்களுடன் கூடிய அம்மா தியேட்டர் பிரம்மாண்டமாக வர உள்ளது.
கோடம்பாக்கம்
மேலும், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், வளசரவாக்கம், மின்ட், கோட்டூர்புரம், முகப்பேர் கிழக்கு பகுதிகளிலும் அம்மா தியேட்டர் கட்டவுள்ளனராம்.
முகப்பேர் தியேட்டரில் வாரச் சந்தை
முகப்பேர் கிழக்கில் அமையும் அம்மா தியேட்டர், அம்மா வாரச்சந்தை அமைக்கும் தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பாடி கிராமத்தில்
அதில், மண்டலம்-7 முகப்பேர் கிழக்கு வார்டு 93 சர்வே எண்.50 பாடி கிராமத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான காலியாக உள்ள 3.94 ஏக்கர் நிலத்தில் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை அமைக்க மன்ற அனுமதி கோரப்படுகிறது.
10,000 மக்களுக்குப் பலன் கிடைக்கும்
இப்பகுதியை சுற்றி உள்ள பாடிகுப்பம், பாடிபுதுநகர், முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு, கோல்டன் ஜார்ஜ்நகர், அன்னை பிளாட், கோல்டன் ஜூப்ளி பிளாட், திருவல்லீஸ்வரர் நகர் மற்றும் குமரன்நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளதால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் வசதிக்காக
இங்கு அம்மா தியேட்டர், அம்மா வாரச்சந்தை அமைத்தால் உபயோகமாக இருக்கும் என்பதால் வீட்டுவசதி வாரியத்திடம் சென்னை மாநகராட்சி முன் நுழைவு அனுமதி மற்றும் நில உரிமை மாற்றம் செய்ய தீர்மானிக்கிறது.
இலவசமாகவோ அல்லது குத்தகைக்கோ
வீட்டுவசதி வாரியத்தில் 3.94 ஏக்கர் நிலத்தை இலவசமாகவோ, குத்தகைக்கோ அல்லது சதுரஅடி 1 ரூபாய் வீதம் வாடகைக்கோ பெற வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனரின் ஒப்புதல் வாங்க மன்ற அனுமதி கோரப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே முள்ளங்கி, முட்டைக்கோஸ், தக்காளி வாங்கி விட்டு "அம்மா" தியேட்டரில் "ரஜினி" படம் பார்க்க வசதி ஏற்பட்டுள்ளது.