ஏலச்சீட்டு நடத்தி 27 லட்சம் “அபேஸ்” – சென்னை தம்பதி கைது
சென்னை: சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 27 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொரட்டூர், சீனிவாசபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பெயர் புஷ்பா. குமார் முதலில் தச்சு தொழில் செய்து வந்தார்.
அதில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் ஏலச்சீட்டு தொழிலை தொடங்கினார். அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குமார் நடத்திய ஏலச்சீட்டில் உறுப்பினராக சேர்ந்து பணத்தை கொட்டினார்கள்.
ஆனால் ஏலச்சீட்டு முதிர்ச்சி அடைந்தபிறகும் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் குமார் ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது.
ரவீந்திரன் என்பவர் உள்ளிட்ட 10 பேர் ஏலச்சீட்டு பணம் ரூபாய் 27 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் குமார் மீது புகார் கொடுத்தனர்.
கமிஷனர் ஜார்ஜ், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கருணாநிதி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
குமாரும், அவரது மனைவி புஷ்பாவும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் நேற்று அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.