கேவலம்.. குழந்தைகளின் ஆபாச படங்களை வெப்சைட்டில் வெளியிட்டு ரூ.2.4 கோடி வசூல்! சென்னையில் தம்பதி கைது
சென்னை: குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிட்டு காசு பார்த்த கணவன், மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரத்து குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த சம்பவம்.
குழந்தைகளின் நிர்வாண படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு சில இணையதளங்கள் இயங்கி வருவதாக சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அதில் 2 இணையதள பக்கங்கள் சென்னையில் இருந்து செயல்பட்டு வருவதை கண்டுபிடித்தனர். வெப்சைட்டுகளை இயக்கி வந்தது யார் என்று விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆபாச தம்பதி
சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சித்தார்த்த வேலு அவரது மனைவியான, பிரிசில்லா மார்க்ரெட் தனராஜ் ஆகிய இருவரும்தான் இந்த கேடுகெட்ட செயலில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணம் வசூலிப்பு
ஆபாச கணவன், மனைவியிடம் விசாரணை நடத்தியபோது, இந்த ஆபாச இணையதளங்களை பார்க்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று குறிப்பிட்டு 'வாடிக்கையாளர்களிடம்' பணம் வசூலித்ததும் தெரியவந்தது.
ரூ.2.4 கோடி அசிங்க பணம்
மொத்தம், ரூ.2.4 கோடி அளவுக்கு பணத்தை வசூலித்துள்ளனர் இந்த ஆபாச தம்பதிகள். பெங்களூரிலுள்ள வங்கி கிளைக்கு இந்த பணம் சென்று சேர்ந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
வக்கிரவாதிகள்
அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இருந்தால்தான் இவ்வளவு பணத்தை திரட்ட முடியும். எனவே அந்த அளவுக்கு வக்கிர மனம் படைத்தவர்களுக்கு ஏற்ற வகையில் படங்களை ஆபாச தம்பதி வெளியிட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் பணம் கட்டி ஆபாச படம் பார்த்த வக்கிர நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணையை தொடக்கி உள்ளனர். விரைவில் அவர்களும் சமூகத்தின் முன்பு அம்பலப்படுத்தப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடத்தலுக்கு வாய்ப்பு?
குழந்தைகளின் படங்களை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து, உடலை மார்ப்பிக் செய்து படம் வெளியிட்டனரா, அல்லது குழந்தைகளை கடத்தி நிர்வாணப்படுத்தி படம் எடுத்து அதை வெளியிட்டு உடல் வளர்த்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.