சிலைக்கடத்தல் வழக்கில் இயக்குநர் வி.சேகருக்கு ஜாமீன் மறுப்பு.. அரசுத் தரப்பில் எதிர்ப்பு
சென்னை : சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் வி.சேகருக்கு ஜாமின் வழங்க சென்னை நீதிமன்றம் மறுத்து விட்டது.
திரைப்பட இயக்குநர் வி சேகரின் ஜாமின் மனு சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சேகர் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரப்பட்டது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனையடுத்து சேகருக்கு ஜாமின் வழங்க நீதிபதி சத்யா மறுத்துவிட்டார். முன்னதாக மூன்று நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், ஒரே நாளில் விசாரணையை முடித்த போலீசார் புதன்கிழமை சேகரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணைக்கு வி.சேகர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
கடந்த மே மாதம், மேற்கு மாம்பலத்தில் வைத்து 77 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஐம்பொன் சிலைகளை போலீசார் பிடித்தனர். சிலைகளை கடத்திய பெரம்பலூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் தனலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், சிலை கடத்தலில் இயக்குநர் வி.சேகருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இயக்குநர் சேகர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.