ரூ75 கோடி மோசடி: பச்சமுத்துவுக்கு ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு- விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை : மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி ரூ75 கோடி மோசடி செய்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவுக்கு ஜாமீன் கொடுக்க மாயமான மதனின் தாயார், பணத்தை பறிகொடுத்த மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக 112 பேரிடம் ரூ.75 கோடி வரை மோசடி செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவில் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், கல்லூரி வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தரான பச்சமுத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி ஜாமீன் கோரப்பட்டது. ஆனால் இதை நிராகரித்த மாஜிஸ்திரேட் பிரகாஷ் செப்டம்பர் 9-ந் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பச்சமுத்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே பச்சமுத்துவின் ஜாமீன் மனு பிற்பகல் விசாரணை நடைபெற்றது. அப்போது பச்சமுத்துவுக்கு ஜாமீன் தர, மாயமான மதனின் தாயார், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பச்சமுத்து தரப்பி, புகார்களில் உண்மை எதுவும் இல்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.