மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் பாம்பு பிடித்த 8 பேர் கைது - வனத்துறை நடவடிக்கை
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே சர்க்கரை ஆலை வளாகத்தில் குடியிருந்த பாம்புகளை பிடித்த 8 பாம்பாட்டிகளை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 380 பாம்புகளையும் கைப்பற்றினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இயங்கி வரும் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள முட்புதர்களில், விஷப் பாம்புகள் நடமாடுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆலை நிர்வாகம் காரைக்குடி அருகே உள்ள சாயல்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி,29, கண்ணன்,48, லட்சுமணன்,56, முருகன்,20, ஆர்.கண்ணன்,50, அமாவாசை,55, முருகன்,45, கண்ணன்,34 ஆகிய பாம்பாட்டிகளை வர வழைத்தது.
பாம்புகள்
கடந்த 2 நாட்களாக ஆலை வளாகத்தில் சுற்றித் திரிந்த நூற்றுக்கணக்கான பாம்புகளை பக்குவமாக கோணிப் பையில் பிடித்தனர் பாம்பாட்டிகள். இந்த தகவலை அறிந்த ஊர்மக்கள் ஏராளமானோர் ஆலைக்கு வந்து பாம்பு பிடிப்பதை வேடிக்கை பார்த்தனர்.
வனத்துறையினர் ஆய்வு
ஆயிரக்கணக்கான பாம்புகள் பிடிக்கப்பட்டதாக தகவல் பரவவே, இதை அறிந்த மதுராந்தகம் வனத்துறையினர் மற்றும் சென்னை வன உயிரின பாதுகாப்பு குழுவினர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். நல்ல பாம்பு, சாரை பாம்பு, கண்ணாடி விரியன், தண்ணீர் பாம்பு என 360 பாம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பாம்பாட்டிகளிடம் விசாரணை
பாம்பாட்டிகள் பிடித்த பாம்புகளில் 4 மண்ணுளி பாம்பு குட்டிகளும் அடங்கும். 8 பாம்பாட்டிகளையும், சென்னை வேளச்சேரியில் உள்ள வன உயிரின பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருளர்கள்
ஒரு நிறுவன வளாகத்தில் இருக்கும் பாம்பை பிடிக்க வேண்டுமென்றால், வன உயிரின அலுவலர் எங்களுக்கு அனுமதி வழங்குவார். நாங்கள், எங்களிடம் பதிவு செய்துள்ள இருளர் சங்க உறுப்பினர்களைக் கொண்டு அந்த பாம்புகளை பிடிப்போம்.
அனுமதியின்றி பாம்பு பிடிப்பு
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, எங்களிடம் எந்த அனுமதியும் கோராமல், அவர்களே ஆட்களை நியமித்து பாம்புகளை பிடித்து வந்தது நேற்று நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பாம்பு பிடித்துக்கொண்டிருந்த 8 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அபராதம் விதிக்க முடிவு
இது தொடர்பாக ஆலை நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்டிருக்கிறோம். 360 பாம்புகளை கைப்பற்றி இருக்கிறோம். அதில் நல்ல பாம்பு, சாரை பாம்பு, மண்ணுளி பாம்பு, தண்ணீர் பாம்பு, கண்ணாடி விரியன் ஆகிய வகைகள் உள்ளன. அவற்றை விரைவில் வனப் பகுதிகளில் விட்டுவிடுவோம். பாம்பு பிடித்த எட்டு பேருக்கும் வன உயிரின பாதுகாப்பு சட்டம்- 1972-ன் படி உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.