சென்னை-ஜெர்மனி விமானத்தில் ”திடீர்” இயந்திரக் கோளாறு- விமானியால் உயிர்தப்பிய பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து ஜெர்மனி சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அதிர்ஷ்டவசமாக கண்டறிந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணிக்கு 195 பயணிகள், 7 விமான பணியாளர்களுடன் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறந்த போது திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
உடனே அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நள்ளிரவு 2.15 மணிக்கு விமானம் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.
விமானத்தில் கோளாறு சரி செய்த பின்னர் காலை 5.30 மணிக்கு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. விமானி உரிய நேரத்தில் கோளாறை கண்டுபிடித்ததால் 195 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.